விவசாயத்துக்கு NO LOCKDOWN

விவசாயத்துக்கு NO LOCKDOWN
    அடங்கி ஆரவாரமில்லாமல் இருந்தது ஏமாளிப்பட்டி கிராமம். திண்ணையில் இருந்த நாற்காலியில் தாத்தா குமாரசாமி அமர்ந்திருந்தார். உள்ளிருந்து அப்பா ராமசாமி முகத்தை துடைத்தவாறே வெளியே வந்தார்.

“ஏப்பா ராமசாமி உழவுக்கு வண்டி வரச்சொன்னமே வந்துருச்சா…..?”, தாத்தா கேட்டார்.

“இன்னும் வரலப்பா, காலையிலேயே போன் பண்ணுனேன். வர்றன்னுதான் சொன்னாங்க…… அப்பா”, அமைதியாய் பதில் சொன்னார்.

“மறுபடியும் போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேளுப்பா. டீசலுக்கு பணம் இல்லைனு சொன்னா போய் பணம் குடுத்து டீசல் புடிச்சிகிட்டு வரச்சொல்லு. மெயின் ரோட்டுல எங்கேயாவது வண்டிய மறிச்சிருந்தாலும் நீ நேர்ல போயி விவரம் சொல்லி கூட்டிட்டு வா…..” தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அப்பா கிளம்ப ஆயத்தமானார்.

பாட்டி மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு வந்துகொண்டிருந்தார். தாத்தாவின் அடுத்த கேள்வி பாட்டியின் பக்கம் திரும்பியது.

“செல்லம்மா…….. ஆளுங்க வந்துட்டாங்களா?”

“வந்துட்டாங்க…… களை எடுக்க நாலுபேரை அனுப்பிட்டு காய் அறுக்க நாலு பேரை போகச்சொல்லியிருக்கேன். டீத்தண்ணி வைச்சு எடுத்துகிட்டு நானும் போகணும்”, என்றாள் பாட்டி.

“சாயந்திரம் வீட்டுக்கு போகும்போது அரிசி, பருப்பு , காய்கறியெல்லாம் கொடுத்து அனுப்பு வெறும் பணத்தை வைச்சிகிட்டு எதுவும் வாங்க முடியாம சிரமப்பட போறாங்க……..”, தாத்தா சொல்லி முடிக்குமுன்பே பாட்டியிடமிருந்து பதில் வந்தது.. “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்…”

“நல்ல பொருத்தமான ஜோடி…..”, அம்மியில் ஏதோ அரைத்து கொண்டிருந்த அம்மா முனகினார்.

கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை இழந்து கொண்டிருந்தேன். ஆனால் அம்மா முந்தி விட்டாள்.

“ஏன் மாமா…… ஊருபூரா ஏதேதோ நடக்குது. டவுனுல எல்லாம் கடையை பூட்டிகிட்டு வீட்ல உட்கார்ந்துகிட்டு இருக்காங்க……. நீங்க மட்டும் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வேலை செய்ஞ்கிட்டு இருக்கீங்க….. ஒரு பத்துநாள் சும்மாதான் இருங்களேன்.”

“ஏம்மா….. நாம மட்டுமா வேலை செய்றறோம். பல அரசு துறைகள் வேலை செய்ஞ்சிகிட்டுதாம்மா இருக்காங்கா…”, தாத்தா அமைதியாய் பதில் சொன்னார்.

“அதுக்கில்ல மாமா…… இப்ப வௌஞ்ச காய்கறியை விக்கவே சிரமமா இருக்குது. மறுபடியும் விதைச்சு அறுத்து சிரமப்படனுமான்னுதான் கேட்டேன்……”, அம்மா விடாது தொடர்ந்தாள்.
இப்போது தாத்தா என் பக்கம் திரும்பினார்.

“குமாரு….. இந்த சொட்டுநீர் கம்பெனிகாரங்க வருவாங்களான்னு கேளு. எந்த கம்பெனியும் அட்வான்ஸ்கூட தராததால ரொம்ப சிரமப்படறதா சொன்னாங்க…”
“அப்படி வர்ர மாதிரி இருந்தா தங்கி வேலை செய்ய சொல்லு…… சாப்பாடு எல்லாம் நம்ம வீட்லயே சாப்பிடட்டும்….”, எனக்கும் உத்தரவு வந்தது.

ஏற்கனவே வெளியே எங்கேயும் போக முடியாத கடுப்பில் பதில் சூடாக வந்தது.

“ஏன் தாத்தா….. சும்மாவே இருக்க மாட்டிங்களா…….. பேசாம டிவி பார்த்துகிட்டு இருக்கவேண்டியதுதானே….”

“எவ்வளவு நாள்தாம்பா …. சும்மா இருக்கறது……”, தாத்தா சிரித்தார்..

“ஒருமாசம், ரெண்டு மாசம்தான் ஆகட்டும்…… இப்ப என்ன கெட்டுபோயிடும்…….”, ஊரடங்குமேல் இருந்த கோபம் தாத்தா மீது இறங்கியது……

“ரெண்டுமாசம் கழிச்சி?…….”, தாத்தா புன்னகையோடு வெற்றிலையை எடுத்தார்……..

“இதெல்லாம் அப்ப செஞ்சிக்கலாம்….”, புத்திசாலிதனமாய் பதில் சொன்னேன்.

தாத்தா வெற்றிலையில் சுண்ணாம்பை தடவியபடியே கேட்டார் “நான் அதைக்கேக்கலப்பா…… ரெண்டு மாசம் கழிச்சி என்ன சாப்பிடுவன்னு கேட்டேன்….”

அதிர்ந்தேன்……

கேள்வி புரிய துவங்கியது.

அம்மி நின்றது…..

“குமாரு…… இன்னிக்கு சாப்பிட்ட கீரை இருபது நாளுக்கு முன்னாடி விதைச்சது. இருபது நாளைக்கு பிறகு கீரை வேணும்னா….. இன்னிக்கு விதைக்கணும். “
“இன்னைக்கு நடவு பண்ணுனாதான் ரெண்டு மாசம் கழிச்சி காய்கறி சாப்பிடமுடியும்.”
“அதனால விவசாயம் மட்டும் நிக்கவே கூடாதுப்பா……”

வெற்றிலையை மெல்ல துவங்கினார். எனக்கு சில விஷயங்கள் புரிய துவங்கியது. ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“சரி…. அப்படி பாடுபட்ட காய்கறி பழத்தையெல்லாம் விற்க படாதபாடு பட வேண்டியிருக்கு. நல்ல விலையும் கிடைக்கல… யாரோ சாப்பிடறதுக்கு….. யாரோ சம்பாதிக்கறதுக்கு நாம ஏன் கஷ்டபடணும்……”, அடுத்த கேள்வி கேட்டேன். தாத்தவின் தோல்வியை எதிர்பார்த்தேன்…….

“டேய் குமாரு…… ஒண்ணு ரெண்டு குறை இருக்கும்….. அதையே சொல்லிகிட்டு இருக்க கூடாது… சரி….. இப்படி நெனச்சிக்க……. இந்த சூழ்நிலைல தன்னலம் பார்க்கமா வேலை செய்றவங்களுக்காக விவசாயம் பண்றதா நெனச்சிக்க…..”,
“நெல்லுக்கு பாயுற தண்ணி ….. கொஞசம் புல்லுக்கும் போற மாதிரி மத்தவங்களும் சாப்பிட்டுட்டு போகட்டும்…….”, வெற்றிலை எச்சிலை துப்பி விட்டு சிரித்தார் தாத்தா.

நிமிர்ந்து பார்ததேன். தாத்தாவிடம் வெற்றி களிப்பு இல்லாததால் எனக்கு தோல்வி தெரியவில்லை.

அம்மி அரைக்க துவங்கியது அம்மாவின் சிரிப்போடு….

நான் போனை எடுத்தேன்…….

“சொட்டுநீர்….. கம்பெனிங்களா…. நம்ம வயல் ரெடியாயிருக்குது. வறீங்களா…. வாங்க…… நாங்க பார்த்துக்கிறோம்..”

    எந்த தொழில் நின்று போனாலும் விவசாயம் மட்டும் இருந்தால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் அனைத்து தொழில்களும் இயங்கி விவசாயம் நின்று போனால் உலகத்தில் ஒரு உயிரினமும் உயிரோடு இருக்காது..

சூரியன் உதிப்பதும் நிற்பதில்லை!!

விவசாயி விளைவிப்பதும் நிற்பதில்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!